மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய டி.ஒய்.சந்திரசூட்.. மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.166 கோடியில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை தொடங்கி வைத்துள்ளார்.

நீதிமன்றங்கள் திறந்து வைப்பு
அதேபோல் மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி ஆர்,சுப்பிரமணியன், நீதிபதி மகாதேவன், அமைச்சர்கள் ரகுபதி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மீனாட்சியம்மன் கோவில்
முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

சாமி தரிசனம்
கோவிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம் செய்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் அந்த நேரத்தில் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் இரவில் அவர், கோச்சடை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினார்.

மதுரை வரும் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் மதுரை நீதிமன்ற கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை வந்தார். இதனைட்டி மதுரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications