மதுரையில் தொடங்கிய நயினார் நாகேந்திரன் பிரச்சாரம்.. கண்டுகொள்ளாத பாஜக மேலிடம்.. மிஸ்ஸான எடப்பாடி!
மதுரை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தின் தொடக்க விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்காதது பேசுபொருளாகி இருக்கிறது. இதனால் நயினார் நாகேந்திரனை பாஜக மற்றும் அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒவ்வொரு தொகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போதே கிட்டத்தட்ட வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துவிட்டதாக தெரிகிறது. அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மதுரையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அண்ணாமலை மேற்கொண்ட என் மண், என் மக்கள் யாத்திரையை போல் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் என்று தொடங்கி இருக்கிறார்.
நயினார் நாகேந்திரன் தொடங்கிய இந்த பயணம் மதுரை அண்ணா நகரில் தொடங்கியது. அதற்கான பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும், தமிழ்நாட்டில் இருந்து தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு இருவரும் பங்கேற்றனர். இந்த விழாவில் தமிழக பாஜகவின் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சிக்கும் பேச்சும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா திமுக குடும்பத்தை பேசும் பேச்சும் இடம்பெற்றுள்ளது. இது அதிமுகவினருக்கும் ஷாக்காக அமைந்தது.
இதனிடையே நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களாக இந்த சுற்றுப்பயண தொடக்க விழாவில் ஜேபி நட்டா அல்லது நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று கூறி வந்தார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்க உள்ளதாக கூறினார். ஆனால் பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் நயினார் நாகேந்திரனை கண்டுகொள்ளவே இல்லை என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தங்கள் சார்பாக சில நிர்வாகிகளையும் மட்டும் தொடக்க விழாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே டெல்லி பாஜக மேலிடம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இரு தரப்பும் வெவ்வேறு பாதையில் பயணித்து வருவதாக பார்க்கப்படுகிறது. இதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளும் காரணம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications