மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு.. விமர்சனங்களுக்கு நவாஸ் கனி எம்பி பதில்
மதுரை: மதுரை சுற்றுவட்டார அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும் நூற்றாண்டு காலமாக பழமை மிக்க சிக்கந்தர் தர்கா மலை மீது அமைந்துள்ளது, அங்கு ஆண்டாண்டு காலமாக ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று. தற்போது ஏதோ புதிதாக அசைவ உணவு கொண்டு சென்று உண்ணுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று விமர்சனங்களுக்கு நவாஸ் கனி எம்பி பதில் அளித்துள்ளார்.
இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி வழிபாடு செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர் . தொழுகை வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்த ராமநாதபுரம் எம்பியும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ்கனி, தனது எக்ஸ் தள பக்கத்தில் என்ன நடந்தது என்று பதிவிட்டிருந்தார்.

நவாஸ்கனி வெளியிட்ட பதிவில், "மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள்.எனவே தேவையற்ற அசௌகரியத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார்.சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர். விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருந்தார்.
நவாஸ் கனியின் இந்த பதிவினை டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "ஆன்மீக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.
குறிப்பாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும் என்று, அனைத்து சமூக மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதேபோல் இந்து அமைப்புகளும் நவாஸ்கனி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இதற்கு பதில் அளிக்கும்வகையில் நவாஸ் கனி எம்பி வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டார அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும் நூற்றாண்டு காலமாக பழமை மிக்க சிக்கந்தர் தர்கா மலை மீது அமைந்துள்ளது, அங்கு ஆண்டாண்டு காலமாக ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதுதான் ஏதோ புதிதாக அசைவ உணவு கொண்டு சென்று உண்ணுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அங்கு ஆடு, கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டது, உணவுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இது நூறாண்டுகளுக்கும் மேலாக தொடரும் நடைமுறை. காசி விஸ்வநாதர் ஆலயம் அங்கு அமைந்துள்ளது அதற்கு தனி பாதை உள்ளது, சிக்கந்தர் தர்காவிற்கு தனி பாதை உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத மக்களும் அங்கு நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் இணைந்து சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது தான் திடீரென இது போன்ற சர்ச்சைகள் கிளம்பி இருக்கின்றன.
இத்தனை ஆண்டு காலம் இது குறித்த எந்த பிரச்சனையும் வராத நிலையில், தற்போது இதன் மூலம் அரசியல் ஆதாயம் கண்டிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட மூல அறிக்கையின்படி தர்கா அமைந்துள்ள 50 சென்ட் நிலம் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த பகுதியில் தான் தர்கா அமைந்துள்ளது.
அங்கு இஸ்லாமியர்கள் வழிபாடு செய்வதும், இந்துக்கள் வழிபாடு செய்வதும் எந்தவித இடர்பாடுகளும் சர்ச்சைகளும் இன்றி காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக நாம் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்போம். பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காலம் காலமாக எப்படி அங்கு நல்லிணக்கத்தோடு வழிபாடுகள் நடத்தப்பட்டதோ அந்த நடைமுறை தொடர முயற்சிப்போம். நல்லிணக்கமும், ஒற்றுமையும் ஓங்கட்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications