வக்பு வாரிய மசோதா.. வாக்கெடுப்பை புறக்கணித்த அன்புமணி ராமதாஸ்.. பாய்ண்ட்டை பிடித்த சீமான்!
மதுரை: வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு ஆதரவாக தமாகா தலைவர் ஜிகே வாசன் வாக்களித்திருப்பது சரியல்ல என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அதேபோல் வாக்கெடுப்பில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தாலும், அது பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடாகவே அமையும் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையில் காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆதரவாக 128 பேரும், எதிராக 95 பேரும் பதிவு செய்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜ்ய சபாவில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரு முக்கிய கட்சிகளும் எதிர்த்தே வாக்களித்தனர். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசன் மட்டும் ஆதரவாக வாக்களித்தார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செயல்பாடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் வக்ஃபு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்பாமல் புறக்கணித்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமகவும் ஆதரவு தெரிவித்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்த்து வாக்களிக்காமல் புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், வக்ஃபு வாரிய திருத்த மசோதா விவகாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆதரவாக வாக்களித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இருப்பதால், அது அவர்களின் நிலைப்பாடு.
அதேபோல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறுவதும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே சென்றுவிடும். அதாவது நாடாளுமன்றத்தில் நடுநிலை, வெளியேற்றம் என்பது அந்த கருத்துக்கு ஆதரவாகவே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே, அது எதிர்ப்பு என்று கணக்கில் கொள்வார்கள்.
அதனால் ஜிகே வாசன் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது தவறான முடிவாகும். அந்த முடிவை ஜிகே வாசன் ஏன் எடுத்தார் என்று தெரியவில்லை. நாட்டில் அவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, வக்ஃபு இடங்களை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதால், இந்துக்களின் வாக்குகளை தன்பக்கம் குவிக்கும் என்றால், அது அரசாட்சி முறைக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications