"எங்கிருந்தாலும் வாழ்க".. டக்கென வந்து விழுந்த கேள்விக்கு சிரிப்போடு பதில் கொடுத்த ஓபிஎஸ்!
மதுரை : மதுரை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு கேள்விக்கு, "எங்கிருந்தாலும் வாழ்க" என சிரித்தபடியே தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மைத்ரேயன் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பாஜகவில் செயல்பட்டு வந்த மைத்ரேயன், 1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. அந்தச் சமயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார்.
அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடப்பாடி பழனிசாமியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 23 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்துவந்த மைத்ரேயன், அதன்பிறகு ஒதுங்கி இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் அருண் சிங், சிடி ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எங்கிருந்தாலும் வாழ்க என கிண்டலாக சிரித்தபடி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் மேலும் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஏற்கனவே மேகதாது பற்றி விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழ்நாடு அரசின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications