திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு.. “கட்சியில் தான் இருக்கிறார்கள்”.. ஓபிஎஸ் பரபர பேட்டி!
மதுரை : திருச்சியில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் உட்பட அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். அதனை எதிர்த்து ஓபிஎஸ் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிகழ்ந்து வரும் அதிமுக குழப்பங்களுக்கு மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி, எம்.ஜி.ஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுக தொடங்கி 51-வது ஆண்டு விழாவோடு முப்பெரும் விழா மாநாடு திருச்சியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள். அதிமுக மாநாட்டுக்கு சசிகலா, கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும். அவர்கள் யாரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை, அவர்கள் கட்சியில் தான் இருக்கிறார்கள். அதிமுகவின் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும், அனைவரும் அதில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி, அதிமுகவின் முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என்றும், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும், எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.
மேலும், ஏப்ரல் 10ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெறும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications