“ஒன்றுபட்டால்..” ஓபிஎஸ் மகன் அட்வைஸ்! திரண்டு வந்த ஆதரவாளர்கள் - மூக்கையா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி
மதுரை: பி.கே.முத்தையா தேவரின் 43 வது நினைவுநாளை முன்னிட்டு தெற்கு மாவட்டங்களை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஆதரவாளர்கள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையா தேவர் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர்.
இந்த நிலையில், மூக்கையா தேவரின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.
திமுகவோடு ஐக்கியம் ஆகிட்டாரு ஓபிஎஸ்.. இப்போ மகன் நன்றிக்கடன் செலுத்துறாரு.. விளாசிய ஜெயக்குமார்!
ஓ.பி.எஸ் அமைத்த குழு
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை கொண்டு 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துமாறு அறிவித்தார். தென் மாவட்டங்களில் உள்ள தனது பலத்தை காட்ட ஓ.பன்னீர்செல்வம் இதனை பயன்படுத்துவதாக கூறப்பட்டது.
நினைவிடத்தில் அஞ்சலி
இந்த நிலையில் காலை 11 மணிக்கு மூக்கையா தேவரின் நினைவிடத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் உள்ளிட்ட பலர்
மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஓ.பி.ஆர். பேட்டி
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முத்துராமலிங்க தேவர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஓ.பி.ரவீந்திரநாத், முழு விபரத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதயங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும்." என்று கூறினார்.
தென்மாவட்ட தலைவர்கள்
தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மூக்கையா தேவர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடம் ஆயிரக்கணக்கான தெற்கு மாவட்ட அதிமுகவினர் திரளாக பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.