"சமஸ்கிருதம்"..அறிவுரை வழங்காதது அரசின் தவறு! மதுரை டீனை பொறுப்பாக்குவது நியாயமில்லை- ஓபிஎஸ் கடிதம்
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம் என மாணவர்கள் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

மாணவர்கள் செய்த தவறு
இந்த நிலையில் மாணவர்கள் செய்த தவறுக்கு டீனை பொறுப்பாக்கக் கூடாது. அவரை மீண்டும் பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் மருத்துவர் ஏ.ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க திமுக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

மகரிஷி சரக் சபத் உறுதிமொழி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகரிஷி சரக் சபத் உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளை பார்க்கும் போது, தமிழ்நாடு அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இது போன்ற உறுதிமொழி ஏற்கனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.

மருத்துவக் கல்லூரி
இதன் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது. மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காதது இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
Recommended Video

நியாயமற்ற செயல்
எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக்கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதைக் கருத்தில்கொண்டு, மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications