என் தந்தை இறந்தபோது கலைஞர் சொன்ன வார்த்தை.. மதுரையில் கண் கலங்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்துள்ளது. மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார்கள். இறுதிகட்ட பிரச்சாரத்தில் தன் தந்தை பற்றி பேசும்போது அவர் கண் கலங்கியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தன்னுடைய இறுதிகட்ட பிரச்சாரத்தில் பேசியபோது, "2016 தேர்தல், 2021 தேர்தல் என் அரசியல் பாதையை நினைவு கூற விரும்புகிறேன். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயிலில் வந்தபோது, என் தந்தை இறைவன் பாதம் சென்றார். அமைச்சராகி ஒரு வாரத்திற்குள் காலமானார்." என்றார்.

கலங்கிய பிடிஆர்
திடீரென அவர் கண் கலங்கினார். அங்கிருந்த திமுகவினர் "பிடிஆர் வாழ்க" என்று அவரை ஆறுதல் படுத்தினர். கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசிய பழனிவேல் தியாகராஜன், "அன்றைக்கு நான் ஜப்பான் டோக்கியோவுக்கு ஒரு பணிக்காக சென்றிருந்தேன். எல்லாவற்றையும் விட்டு அவசர அவசரமாக வந்தேன். என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு அது" என்றபோது மீண்டும் கண் கலங்கினார்.
'ஐயா நம்ம கூட தான் இருக்கார். கவலைப்படாதீங்க. நம்முடைய வெற்றி உறுதி' என்று தொண்டர்கள் சமாதானப்படுத்தினார்கள். மீண்டும் தொடர்ந்த பிடிஆர், "அப்போது தலைவர் கலைஞர் எங்களுக்கு எல்லா வகையில் உறுதியாக இருந்தார். கலைஞர் என்னிடம், நீங்கள் நாடு திரும்புங்கள். உங்கள் தந்தையின் தொகுதியில் வேட்பாளராக நில்லுங்கள்" என கூறினார்.
கலைஞருக்கு நன்றி கடன்
'எம்எல்ஏவாக தேர்வாகி, அமைச்சராக்குவோம்' என்றார். அப்போது எனக்கு திருமணமாகி மனைவி ஒரு குழந்தை இருந்தனர். மனைவி 2வது முறை கர்ப்பமாகியிருந்தார். முதல் மகனுக்கு 3 வயது. அவர்களை விட்டு இங்கு உடனடியாக வர முடியவில்லை. கர்ப்பமாக இருந்ததால் இங்கு பிரசவம் பார்க்கவும் மனைவி யோசித்தார். அவர் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
எல்லாவற்றையும் கடந்து தேர்தலில் நின்றேன். திடீரென ஒரு நாள் அமைச்சராக்கினார். அந்த நெருக்கடியான காலத்திலும் எனக்கு மகத்தான வாய்ப்பை வழங்கினார். கலைஞருக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்" என்று மீண்டும் கலங்கினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications