நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை! CISF-யை கைது செய்வோம்னு சொல்றாங்க! மனுதாரர் குற்றச்சாட்டு
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என மனுதாரர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டினார். 144 தடை உத்தரவு போட்ட பிறகு, போலீஸார் மட்டும் கூட்டமாக நிற்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா?
144 தடை உத்தரவு போட்டதால் மத்திய பாதுகாப்பு படையினருக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். மீறினால் மத்திய படையையும் கைது செய்வோம் என போலீஸார் கூறுகிறார்கள். 144 தடை உத்தரவு போட்டுவிட்டு ஏன் போலீஸார் மட்டும் கூட்டமாக நிற்கிறார்கள்? இவ்வாறு ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்ற மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கார்த்திகை தீபம் இந்துக்களின் பாரம்பரியமான பண்டிகையாகும்.
தீபத் திருவிழா
தீபத் திருவிழாவின் போது, தீபத்தூண் அல்லது மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய முறையில் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன்.
மலை உச்சி
மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை எதுவும் இல்லை. பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தீபத்தூண்
பழமையான தீபத்தூணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்களின் மதச் சடங்குகள் செய்வதை தடுக்கும் செயலாகும். அது சட்டவிரோதமானதும் கூட! இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் அன்று விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு உரிய பாதுகாப்பையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுவாமிநாதன் ஆய்வு
இந்த நிலையில் தீபத்தூணில் விளக்கேற்ற முடியுமா என்பதை ஆய்வு செய்ய நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவில், "தீபத் தூணுக்கும் தர்காவுக்கும் இடையே 15 மீட்டர் இடைவெளி உள்ளது. எனவே இங்கு ஏற்றினால் எந்த பிரச்சினையும் வராது. எனவே கார்த்திகை தீபத்தன்று தீபத்தூணில் விளக்கேற்றுமாறு" உத்தரவிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மேலும் "மாலை 6 மணிக்கு தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்" என்றதுடன், தீபத் தூணில் மனுதாரர், மத்திய பாதுகாப்பு படையினருடன் சென்று விளக்கேற்றலாம் என தெரிவித்திருந்தார்.
உச்சி பிள்ளையார் கோயில்
இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்ற மலையில் தீபத் தூணில் விளக்கேற்றப்படும் என எதிர்பார்த்த நிலையில், எப்போதும் போல் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத்தூணில் விளக்கேற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகத்தில் இந்து அமைப்பினரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
144 தடை
அப்போது போலீஸாருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திருப்பரங்குன்றம் மலை மீது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீஸார் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications