இந்தியை அறவே தவிர்த்த மோடி.. இன்றைய பேச்சில் நடந்த தலைகீழ் மாற்றம்.. இதை கவனிச்சீங்களா?
மதுரை: பிரதமர் மோடி தனது பொதுக்கூட்ட உரைகளில் பெரும்பாலும் இந்தி மொழியிலேயே பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமில்லாது அரசு நிகழ்ச்சிகளிலும் இந்தியில் பேசி வரும் பிரதமர் மோடி, இன்றைய தமிழ்நாடு மற்றும் புதுவை விசிட்டின் போது பங்கேற்ற கூட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வர தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தான் பிரதமர் மோடி மதுராந்தகம் வந்திருந்தார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடி
இந்த நிலையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கவும் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டத்திலும் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இரவு சென்னை வந்தார். இன்று காலை புதுவை சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பிறகு உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி தனது உரையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடியின் இன்று ஆங்கிலத்திலேயே உரையாற்றியதை பார்க்க முடிந்தது. வழக்கமாக கட்சி கூட்டம் என்றாலும், அரசு நிகழ்ச்சி என்றாலும் இந்தியில் பேசுவதையே மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்தியை தவிர்த்த மோடி
அப்படி இருக்கும் போது பிரதமர் மோடி இன்றைய பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது அரசியல் வட்டரத்தில் கவனம் பெற்றது. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய கூட்டத்தில் இந்தியை முழுவதுமாக தவிர்த்து இருக்கிறார். தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக எப்போதுமே எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன.
சமீபத்தில் கூட ரயில் நிலையங்களில், ஸ்டேஷன்களில் பெயரில் முதன்மை மொழியாக ஆங்கிலம் இருந்ததை இந்தியாகவும் இந்தி, தமிழ் எழுத்துகளை சிறியதாகவும் வைத்து போர்டு இடம் பெற்று இருந்தது. இதனை திமுக அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்தனர்.
மத்திய அரசுக்கு கண்டனம்
இது தொடர்பாக கனிமொழி கூறும் போது "நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது" என கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்தி திணிப்பை செய்தால் அது ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது என்று திமுக நிர்வாகிகள் கடுமையான எதிர்வினையாற்றி வந்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் கண்டனம் தெரிவித்தனர்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ரீதியாகவும் தங்களுக்கு எதிராகவும் மாறலாம் என்பதால், மோடியும் தனது இந்தி உரையை தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாற்றும் முடிவை எடுத்து இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications