திருமாவளவன் கிளப்பிய சலசலப்பு.. விசிக கொடி கம்பத்தை அலேக்காக அப்புறப்படுத்திய போலீசார்!
மதுரை: மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் தொடர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்நிலையில், மதுரையில் திருமாவளவன் முதன் முதலில் நட்ட கொடி கம்பம் அகற்றப்பட்டது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. ஆனாலும், தேர்தல் பரபரப்புகள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தன்வசப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த புதிய தலைமைக்கு பின்னரும் கூட இதுவரை எந்த தேர்தலிலும் அதிமுக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளரவில்லை.

இடையில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, தற்போது தனியாக கழன்று வந்திருக்கிறது. இப்படி எதிர்க்கட்சிகளின் நிலையற்ற தன்மையை உணர்ந்த விஜய், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, கட்சியின் கொடி, பெயரையும் வெளியிட்டார். இந்த சலசலப்புக்கு மத்தியில்தான் திருமாவளவன் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இது ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை மேலும் அதிகரித்தது.
மாநாடு அறிவித்தது மட்டுமல்லாது, இதில் பங்கேற்க அதிமுகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சி ஒன்று, மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்திருந்தது, கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தியதாகவே பேசப்பட்டது. இருப்பினும் இது குறித்து திருமாவளவன் விளக்கமளித்திருந்தார். எனவே இது தொடர்பான சலசலப்புகள் ஓரளவுக்கு ஓய்ந்தன.
ஆனால் பஞ்சாயத்து இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்று திருமாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று, முடிந்து போன சலசலப்புகளுக்கு மூன்று புள்ளி வைத்து மீண்டும் கிளறிவிட்டது. அந்த வீடியோவில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். பங்கு எனில் தொகுதி ஒதுக்கீட்டில் பங்கு கிடையாது.. கேபினட் அமைச்சரவையில் பங்கு வேண்டும்" என்று திருமா பேசியிருந்தார். முதலில் மது ஒழிப்பு மாநாடு என்றார்கள், பின்னர் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்கள், இப்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் மத்தியில் வீடியோ கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
இந்த வீடியோ சிறிது நேரம் கழித்து நீக்கப்பட்டது, பின்னர் மீண்டும் இதே வீடியோ பதிவேற்றப்பட்டு, அதுவும் கொஞ்ச நேரம் கழித்து டெலிட் செய்யப்பட்டது. இந்த வீடியோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமா, "அட்மின் போட்டிருப்பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
இப்படியான பஞ்சாயத்துக்கு நடுவே, திருமாவளவன் முதன் முறையாக நட்டு வைத்த கொடி கம்பம் போலிசாரால் அகற்றப்பட்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டபோது முதன் முதலாக மதுரை கே.புதுர் பகுதியில், கட்சியின் கொடி கம்பத்தை நட்டு திருமாவளவன் கொடி ஏற்றியிருந்தார்.
இந்த கம்பம் தற்போது அகற்றப்பட்டிருக்கிறது. சாலையை ஆக்கிரமித்து கம்பம் நடப்பட்டிருப்பதாக கூறி போலீசார் நேற்றிரவு இக்கொடி கம்பத்தை அகற்றி, அதே பகுதியில் சில அடிகள் தள்ளி நட்டிருக்கிறார்கள்.
தொடர் சலசலப்புகளுக்கு இடையே விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டிருப்பது, ஏற்கெனவே உருவாக்கியிருந்த விவாதங்களை தற்போது உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications