திமுக கொடியுடன் வந்த காரை மறித்த போலீசார்! ஆளுநர் பங்கேற்கும் விழாவிற்கு கொடியை அகற்றிய பிறகே அனுமதி
மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு திமுக கொடியுடன் வந்த காரை நிறுத்தி, கொடியை அகற்றிய பிறகே காரில் வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார். அதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இதில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரைக்கு வருகை தருவதால் முக்கிய சாலைகளில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை வரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என அறிவித்திருந்தது. இதனையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், விமான நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு வழிச்சாலை நுழைவாயில், கீழக்குயில்குடி விலக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி காட்டியதாக 100க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும் நபர்களை மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கின்றனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு திமுக கொடியுடன் வந்த காரை வழிமறித்த போலீசார், காரை ஓட்டி வந்தவரிடம், கட்சிக் கொடியை அகற்றுமாறு கூறினர்.
அவர் இறங்கி வந்து, காரின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த திமுக கொடியை அகற்றிய பிறகே காரில் வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர். எந்தக் கட்சிக் கொடியுடன் வாகனங்கள் வந்தாலும், வரும் வாகனங்களை, மறித்து கொடிகளை அப்புறப்படுத்திய பின்னரே வளாகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications