பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் கோர்ட்டில் சரண்.. சூடுபிடிக்கும் பலநூறு கோடி மோசடி வழக்கு!
மதுரை: ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது பிரணவ் ஜுவல்லரி.

மேலும், பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுறீங்க? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாங்க, ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை அள்ளிட்டு போங்க என்றும் விளம்பரம் செய்தது பிரணவ் ஜுவல்லரி. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு ஏகபோக வரவேற்பு ஏற்பட்டது.
5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10,000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் பணத்தைக் கட்டினர்.
மேலும், ஆயிரக் கணக்கானோர் பழைய நகைகளை கொடுத்து, ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை அள்ளிச் செல்ல காத்திருந்தனர். ஆனால், பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை, தங்கள் கிளைகளை அடுத்தடுத்து இழுத்து மூடியது. திருச்சியில் உள்ள பிரணவ் ஜுவல்லரியும் மூடப்பட்டது.
இதையடுத்து, அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கானோஃப்ர் போலீசில் புகார் அளித்தனர். மதுரை, திருச்சி என பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கானோர் பிரணவ் ஜுவல்லரி மீது மோசடி புகார் அளித்தனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.
பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரை நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார். இதனையடுத்து இவரை டிசம்பர் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டுள்ளார். மோசடி வழக்கில் பல்வேறு மாவட்டங்களிலும் தேடப்பட்டு வந்த மதன் செல்வராஜ் சரண் அடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.













Click it and Unblock the Notifications