அமைச்சர் பாஸ்கரனா?.. அவர் எந்த இலாகா மந்திரி? யாரென்றே தெரியாதே.. பிரேமலதா பொளேர்
மதுரை: நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் நிலைதான் ஏற்படும் என அமைச்சர் பாஸ்கரன் கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் பாஸ்கரனா? யாரென்றே தெரியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதிலிருந்து தற்போது புதிய தமிழகம் மட்டும் விலகி சென்றுவிட்டது. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது குறித்து தற்போது செய்திகள் வைரலாகி வருகின்றன. சினிமாவில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வருவதை சிலர் எதிர்த்தும், சிலர் இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் கட்சி
மேலும் நடிகரான விஜயகாந்த் ஆரம்பத்தில் கட்சித் தொடங்கி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதுடன் கணிசமான வாக்குகளை பெற்றார். இதையடுத்து அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சித் தலைவராகவும் அலங்கரித்தார் என விஜயகாந்த் குறித்து அனைவரும் பெருமை பேசி வருகிறோம்.

அரசியலுக்கு வருவது
ஆனால் தேமுதிக அங்கம் வகித்திருக்கும் அதிமுக கூட்டணியை சேர்ந்த கதிர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சிவகங்கையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நிலை
அதற்கு பதிலளித்த அவர் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது என்றும், விஜயகாந்த் வந்து எதை சாதித்துவிட்டார்? ரஜினி உள்ளிட்டோர் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என விமர்சித்திருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
இந்த நிலையில் மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் பாஸ்கரன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அமைச்சர் பாஸ்கரனா? யார் அவர்?, எந்த இலாகா? யாரென்றே தெரியாத ஒருவர் கூறிய கருத்துக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications