மதுரைக்கு வரும் பிரதமர் மோடி.. ட்ரோன்கள் பறக்கத் தடை.. போக்குவரத்தில் மாற்றம்
மதுரை: பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதையோட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நாளைய தினம் 27ஆம் தேதி பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலுார் விமான படைத்தளத்துக்கு பகல் 2.30 மணிக்கு வருகிறார். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்துக்குச் செல்லும் அவர் , பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் மாதப்பூர் ஊராட்சி பகுதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மாலை சுமார் 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடையும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக மதுரை கருப்பாயூரணி வீரபாஞ்சானிலுள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாக ஹெலிபேடில் வந்திறங்குகிறார். இதன்பின், 5.15 மணிக்கு டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு சாலை மார்க்கமாக 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பிப். 28-ம்தேதி காலை 8.15 மணிக்கு தாஜ் ஓட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார். மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications