மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி... கனவு நனவாகிறது
Recommended Video
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அன்றைய தினம் மதுரை - சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ரூ.1,258 கோடியில், மதுரை தோப்பூரில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வரும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி, மதுரை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய நகரம்
தென் தமிழகத்தில் சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தென் தமிழகத்தில் அமையவுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் இதற்காக 200 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் கண்டறியப்பட்டு விட்டது. மதுரையில் உலகத் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை இருப்பதை கணக்கில் கொண்டும், தென் தமிழகத்தின் முக்கிய முக்கிய நகரம் என்பதாலும் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
45 மாதங்களில் எய்ம்ஸ்
இழுபறிக்குப் பின்னர் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 4 ஆண்டு கால இழுபறிக்குப் பிறகு இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை நனவாகவுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேஜஸ் சொகுசு ரயில்
தென் மாவட்ட பயணிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிநவீன, முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் சொகுசு ரயில் மதுரை- சென்னை இடையே இயக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 27-ந் தேதி நடைபெறும் விழாவில் தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
பயண நேர தகவல்
தேஜஸ் ரெயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை வந்து சேரும். இந்த ரயில் வியாழக்கிழமையை தவிர பிற நாட்களில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.