மதுரை வரும் முதல்வர்.. லிஸ்ட் போட்ட மாஜி.. தவித்த வாய்க்கு தண்ணீர் தருவாரா?.. ஆர்.பி.உதயகுமார்
மதுரை: உதயநிதி காட்டிய செங்கல்லை வைத்தாவது எய்ம்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு 58ஆம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பயனடையும் வகையில் தண்ணீர் திறக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
தாமரை, இலை.. சண்முகத்துக்கு வந்த சிக்கல்.. தமிழ்நாட்டில் 7 கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி!
ஆட்சியர்
ஆட்சியர் அனீஷ்சேகரும் கால்வாயில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் உசிலம்பட்டி 58ம் கால்வாய் திட்டம் எனும் 40 ஆண்டு கால கனவு திட்டத்தை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி.
கால்வாய் திட்டம்
தற்போது இந்த கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் மனவேதனை அடைந்தனர். 58 ஆம் கால்வாய் திட்டத்தில் அதிமுக அரசு மூன்று முறை தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்த முறை வைகை அணை முழுமையாக நிரம்பி உள்ளதால் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
விவசாயிகள் நலன்
விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாக விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாக திமுக அரசு உள்ளது. மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சினையை கவனத்தில் கொள்வார் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறோம். இதற்கும் முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
விவசாயிகள்
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிடுவாரா?
எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என செங்கல்லை எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்தவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை, உதயநிதி காட்டிய செங்கல்லை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வந்தாவது எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டுவாரா, பணிகளை தொடங்குவாரா என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எத்தனை விழா நடத்தினாலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து சசிகலா குறித்த கேள்விக்கு நாளை வாருங்கள் என சிரித்தபடியே பதில் அளித்தார்.