"ஒற்றுமை".. அதிமுக மாஜியை எஸ்கேப் ஆக செய்த அந்த ஒற்றை வார்த்தை.. 3 முறை என்ன கூறினார் தெரியுமா?
மதுரை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அந்த இடத்தை விட்டே புறப்பட்டுவிட்டார்.
அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பதற்கான போட்டியில் பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி நீதிமன்றத்தை நாடியதால் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்றைய தினம் தாக்கல் செய்கிறார்.

அஇஅதிமுக
இப்படியாக அதிமுகவில் ஒரு புயலே வீசி வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு தந்து பேசி வருபவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இவர் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவை பொருத்தமட்டில் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவை வழிநடத்துவதில், பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்த்தார்கள். ஆனால் ஆளும் கட்சியானதும் அந்த திட்டத்தை ஆதரிக்கிறார்கள்.

தேர்தல் அறிக்கை
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழக அரசு நினைத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என சொன்னார்கள். ஆனால் இன்று வாய் மூடி மவுனியாக இருக்கிறார்கள்.

டாஸ்மாக் மதுபான கடை
டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக தனது வீட்டின் முன்பு மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்றைக்கு பாருங்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சொத்து வரி, மின்சார கட்டணங்கள் தமிழகத்தில் உயர்ந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதிமுக ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்றார். அப்போது அவரிடம் சசிகலாவின் ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தை ட்வீட் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நன்றி வணக்கம் என மூன்று முறை கூறிவிட்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications