சிறு மழைக்கே திணறும் மதுரை கலைஞர் நூலகம்.. உள்ளே புகுந்த மழைநீர்! 2 பிரிவுகள் தற்காலிகமாக மூடல்
மதுரை: மதுரையில் பெய்த சிறு மழைக்கே மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ்த் தளத்தில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் அங்குள்ள இரு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.215 கோடியில் நத்தம் சாலையில் பிரம்மாண்டமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த 2023 ஜூலை 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு பிரிவுகளில் ஏகப்பட்ட புத்தகங்களும் இருக்கின்றன.
கலைஞர் நூலகம்: இந்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, கலைஞர் பகுதி, ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள், கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு, போட்டி தேர்வு மாணவர்களுக்குத் தனிப் பிரிவு எனப் பல பிரிவுகள் உள்ளன. மேலும்,குழந்தைகளையும் கவரும் வகையில் சில பிரிவுகள் உள்ளன.
இப்படிப் பல சிறப்புகள் இருப்பதால் மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இந்த நூலகத்திற்கு வந்து படித்துச் செல்கிறார்கள். இருப்பினும், என்ன தான் அதிநவீன நூலகமாக இருந்தாலும் மழை பெய்தாலே உள்ளே மழை நீர் வந்துவிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படிப் பெய்த மழையில் தான் சில புத்தக ரேக்குகள் துருப்பிடித்தன. அதேபோல கீழ்த் தளத்தில் அமைந்துள்ள பார்க்கிங் பகுதியிலும் மழை தண்ணீர் தேங்கியது
மீண்டும் புகுந்த மழை நீர்: இது பேசுபொருள் ஆன நிலையில், உடனடியாக விரைந்து செயல்பட்ட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தனர்.. மீண்டும் மழைநீர் உள்ளே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இருப்பினும், இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இரண்டு நாட்களாக மதுரையில் பெய்யும் கோடை மழைக்கே கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளது.
தற்காலிகமாக மூடல்: தரைதளத்தில் உள்ள கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மழைநீர் புகுந்துள்ளதால் அந்த இரு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கட்டிடத்திற்கு வெளிப்புறம் இருந்த மழைநீர் குழாய் உடைந்ததால் அந்த நீர் உள்ளே இந்த அறைகளில் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதிநவீன நூலகம் என்கிறார்கள்.. ஆனால் சிறுமழைக்கே பாதிக்கப்பட்டால் எப்படி எனக் கேட்கிறார்கள் மதுரைவாசிகள்.
மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் இனைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பருவமழை காலத்தில் மழை தீவிரமாகப் பெய்ய வாய்ப்பு இருக்கும் நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன காரணம்: வெளிப்புறம் உள்ள மழைநீர் குழாயில் தெர்மோகோல் அடைத்தே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இப்போது நூலகத்தில் புகுந்த நீர் அகற்றப்பட்டுவிட்டதாகவும் மீண்டும் மழை நீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நூலக ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், கணினிகள் இருக்கும் சர்வர் அறை இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதை நூலக ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
மழை காரணமாக இரண்டு நாட்களுக்கு வாசகர்களுக்குப் புத்தகம் இரவல் கொடுப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சாப்ட்வேர் அப்டேட் பணிகள் காரணமாகவே இரவல் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மழைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் நூலக ஊழியர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications