ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி!
மதுரை: ராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தீண்டாமை மற்றும் பெண்ணடிமை இருந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார் ரஞ்சித். மன்னர் குறித்து பேசியதற்காக அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி வரும் 19ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தார்.
சமூக சீர்த்தவாதி கிடையாது
இந்நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் அவரை மிஞ்சும்படியும் பேசியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ராஜ ராஜ சோழன் ஒன்றும் சமூக சீர்த்தவாதி கிடையாது
சமூக நீதி கிடையாது
சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சமூக நீதி கிடையாது. அவர்கள் ஆட்சியாளர்கள் மட்டுமே. சோழ மன்னர்களின் ஆட்சியில் சமூக அமைப்பு சரியாக செயல்படவில்லை.
தீண்டாமை, பெண்ணடிமை
ராஜ ராஜ சோழன் ஆட்சியின் தீண்டாமை பெண்ணடிமை இருந்தது. சோழர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே பொற்காலமாக இருந்தது. இவ்வாறு ராஜ ராஜ சோழன் குறித்து கேஎஸ் அழகிரி பேசினார்.
ரஞ்சித்தை தாண்டிய கேஎஸ் அழகிரி
ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த ரஞ்சித்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு பாராட்டு தெரிவித்ததோடு ஆதரவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி ரஞ்சித்தையும் தாண்டி ராஜ ராஜ சோழனை சாடியுள்ளார்.
வறட்சி பாதித்த மாநிலம்
மேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சியாளர்கள் தங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். நீர்நிலைகளை பராமரித்து மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டினார்.