இந்தி தேசிய மொழி அல்ல.. நண்பர் அஸ்வினின் கருத்து சரி தான்.. ஒப்புக்கொண்ட அண்ணாமலை!
மதுரை: இந்தி தேசிய மொழி அல்ல.. அது அலுவல் மொழி மட்டும் தான் என்ற சிஎஸ்கே நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் கருத்தை ஏற்றுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தி வெறும் இணைப்பு மொழி என்று கூறிய அண்ணாமலை, ஒரு போதும் இந்தி தேசிய மொழி என்று நான் சொல்லியது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தொடர்ச்சியாக இந்தி திணிப்பு குறித்து தொடர்ந்து போராடி வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு முறையும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று கூறும் போது, தமிழ்நாடு அரசு தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்யும். அதேபோல் 3வது மொழியாக இந்தியை திணிக்க மத்திய அரசால் பல்வேறு முயற்சிகளும் நடந்து வருவதாக மாநில அரசு சார்பாக விமர்சிக்கப்படுகிறது.

அதேபோல் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகிற நிதியும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் விவாதமாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி கற்பதற்கு எந்த தடையும் இருக்கவில்லை என்றும், இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற திணிப்புக்கு எதிராக மட்டுமே போராடுவதாகவும் மாநில அரசு பல்வேறு தருணங்களில் கூறி இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய கருத்து தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி மொழி குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள ராஜலட்சுமி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது அஸ்வின் பேசுகையில், ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளில் எந்த மொழியில் பேசலாம் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளுக்கு மட்டும் ஆதரவு இருந்தது. இந்தி மொழிக்கு மாணவர்கள் எந்த சத்தத்தையும் எழுப்பவில்லை. அதன்பின் அஸ்வின், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி அல்ல.. அது அலுவல் மொழி மட்டும் தான் என்று கருத்து தெரிவித்தார். அஸ்வின் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி விவாதமாகியது.
இந்த நிலையில் அஸ்வினின் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அதில், அஸ்வின் சொன்னது மிகவும் சரியான ஒன்று தான். இந்தி ஒன்றும் நமது தேசிய மொழி அல்ல.. அதனை எனது அருமை நண்பர் அஸ்வின் மட்டுமல்லாமல்லாமல், அண்ணாமலை என்ற நானும் சொல்கிறேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது.
அது வெறும் இணைப்பு மொழி தான். நான் இதுவரை எங்கும் இந்தி தேசிய மொழி என்று கூறியதில்லை. வேறு யாரும் அப்படி சொல்லவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினின் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒப்புக் கொண்டிருப்பது கவனத்தை திருப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications