இந்து கடவுள் கண்ணன், ஐயப்பனை ஆபாசமாக விமர்சித்து முழக்கம்- பெரியாரிஸ்டுகள் மீது மதுரை போலீஸ் வழக்கு
மதுரை: இந்து கடவுள்கள் கண்ணன், ஐயப்பனை ஆபாசமாக விமர்சித்து முழக்கங்கள் எழுப்பியதாக பெரியாரிஸ்டுகள் மீது மதுரை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்கள், கட்சிகள் மதுரையில் செஞ்சட்டை பேரணியை நடத்தின. திருச்சியில் கருஞ்சட்டை, கோவையில் நீலச்சட்டை பேரணி வரிசையில் மதுரையில் செஞ்சட்டைப் பேரணி நடத்தப்பட்டது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். மதுரை காளவாசலில் பேரணி தொடங்கியது. பின்னர் பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடதுசாரி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன் எம்.பி, பெரியார் இயக்க தலைவர்கள் கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய இயக்கம் பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் மற்றும் பேரணியில் பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பகுத்தறிவை பரப்புகிற வகையில் நாத்திக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதன் ஒருபகுதியாக இந்து கடவுள்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டன. இந்து கடவுள்கள் எப்படி தோன்றின? என்பதை சுட்டிக்காட்டி இந்த முழக்கங்கள் முழங்கப்பட்டன. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.
பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இத்தகைய முழக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மக்கள் கட்சி சார்பாக மதுரை போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் மதுரை செஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்ற பெரியாரிஸ்டுகள் மீது மதுரை எஸ்.எஸ். காலணி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications