கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு.. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தேவை - அரசு வழக்கறிஞர் ப.பா மோகன்
பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்று நாக்கையும் அறுத்துள்ளனர் என்று வழக்கறிஞர் ப.பா மோகன் கூறியுள்ளார்.
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ப.பா மோகன் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் நட்பாக பழகினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

கொடூர கொலையில் தொடர்பு
சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் யுவராஜ் 100 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து கொண்டு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி போலீசுக்கு சவால் விட்டு வந்தார். சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். யுவராஜை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

106 சாட்சியங்கள் விசாரணை
இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மரியத்திடம், அந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.

ப.பா மோகன் நியமனம்
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தர விட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 மே 5ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சிசிடிவி சாட்சியம்
மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். பலர் பிறழ் சாட்சிகளாக மாறினாலும் இந்த வழக்கில் சிசிடிவி முக்கிய சாட்சியமாக இருந்தது. வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்று தண்டனை குறித்த வாத விவாதங்கள் நடைபெற்றன. பிற்பகலில் தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.

தூக்கு தண்டனை தேவை
இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அரசு வழக்கறிஞர் ப.பா மோகன், கோகுல்ராஜின் தாயார் நீதிமன்றத்தில் எனது மகன் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டதாக கூறினார்.

பொதுவான தண்டனை
கொடூரமான கொலைகளில் உச்சபட்ச தண்டனைதான் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று தூக்கு தண்டனை, மற்றொன்று ஆயுள்தண்டனை. இதுதான் பொதுவான விதி. தூக்கு தண்டனை விதி விலக்கானது என்று வாதிட்டதாக மோகன் கூறினார். இந்த வழக்கில் உச்சபட்ச தண்டனை தர வேண்டுமா? ஆயுள்தண்டனை தர வேண்டுமா என்று பல வழக்குகளை எடுத்துக்காட்டி வாதிட்டதாக கூறினார்.

இளைஞர் மிக கொடூர கொலை
கோகுல்ராஜ் கொலை கொடூரமானது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர், பொறியியல்பட்டதாரி, தான் சாராத வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காக கடத்திக்கொண்டு போய் கழுத்தை வெட்டி தலையை சிதைத்து நாக்கை அறுத்து கொன்றுள்ளனர். இது கொடூரமானது.

உச்சபட்ச தண்டனை தேவை
அரிதினும் அரிதான இந்த வழக்கில் மூலகாரணமாக இருந்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை தர வேண்டும் என்று வாதிட்டிருக்கிறோம் என்று ப.பா மோகன் கூறினார். நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருப்பதாக மோகன் கூறினார்.












Click it and Unblock the Notifications