சாத்தான்குளம் ஜெயராஜ்- ஃபெனிக்ஸ் கொலை வழக்கு! 6 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகிய இருவர் லாக்அப் மரண வழக்கில் நாளை (மார்ச் 23) காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் அதுகுறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.
அப்போது வியாபாரிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும் கடைகளுக்கு குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டு, அந்த நேரத்திற்கு கடையை அடைக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தது.
ஆனால் குறிப்பிட்ட நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் சிறிது நேரம் தாமதமாக கடையை அடைத்ததாக கூறி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் நடத்திய கொடூரமான தாக்குதலால் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். இதைத் தொடர்ந்து மற்ற 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த மரண வழக்கில் சிபிஐ தரப்பில் முதல் கட்டமாக 2027 பக்கங்களிலும் இரண்டாம் கட்டமாக 400 பக்கங்களிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மார்ச் 23 ஆம் தேதி இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் இருந்து இருவரை இழந்த நிலையில் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications