விஐபிகளுக்கு வெண்ணெய்! மக்களுக்கு சுண்ணாம்பு! சித்திரை திருவிழா ஏற்பாட்டில் அலட்சியம் -செல்லூர் ராஜு
மதுரை: மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தால் தான் 2 பேர் உயிரிழக்க நேரிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் மட்டும் பாதை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதே தவிர, பொதுமக்களுக்கு பாதை ஒதுக்கித்தரப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இது போன்ற உயிரிழப்பு நிகழ்வுகள் எதுவும் நடைபெற்றதில்லை என்பதையும் செல்லூர் ராஜூ சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுரை சித்திரை திருவிழா
மதுரையில் நேற்றுடன் சித்திரை திருவிழா முடிவுற்ற நிலையில் அது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, திருவிழாவுக்கான உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அதிகாரிகள் சரியாக செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது 2 பேர் உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம் என்றும் கடந்த ஆண்டுகளில் இது போன்று நிகழ்ந்ததில்லை எனவும் தெரிவித்தார்.

பொறுப்பேற்க வேண்டும்
இந்த துயர நிகழ்வுக்கு பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தை குறைத்திருக்கலாம் எனவும் ஆனால் அது போன்ற எவ்வித உரிய முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இழப்பீடு போதாது
சித்திரை திருவிழாவில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது போதாது என்றும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார். உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் முக்கியஸ்தர்களின் குடும்பத்தினர் சாமி பார்க்க மட்டும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதை போல் பொதுமக்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

சசிகலா விவகாரம்
இதனிடையே சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அவர், அது தான் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என முடிவாகிவிட்டதே, பிறகு ஏன் அவர்களை பற்றி கேட்கிறீர்கள் எனக் கூறி எஸ்கேன் ஆனார்.














Click it and Unblock the Notifications