மொத்தம் 5 பேர் இருக்கோம்.. போனை போட்டாலும் எடுக்கலயே ஏன்.. திராவிடமாடல்? ஸ்டாலினுக்கு செல்லூர் நறுக்
மதுரையில் திமுகவை விமர்சித்து பேட்டி தந்துள்ளார் செல்லூர் ராஜு
மதுரை: மதுரை மக்களின் வளர்ச்சிக்கு எந்த திட்டங்களை செய்யாமல் அரசு மெத்தனமாக இருந்தால், மதுரை மாவட்டத்தில் 5 சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் உள்ளோம்.. நிச்சயம் போராடி திட்டங்களை செயல்படுத்துவோம்" என்று மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு கறாராக தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியில் திமுகவை அவ்வளவாக விமர்சிக்காத நிலையில், இந்த முறை செல்லூர் ராஜு விடாமல் விரட்டி விரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறர். அதிலும் மதுரை மாவட்டத்துக்கு ஒரு பிரச்சனை என்றால், முந்திக் கொண்டு வந்து கேள்வி எழுப்புகிறார்.
மதுரை பிபி சாவடியில் உள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாஜி அமைச்சர் செல்லூர் கே ராஜூ செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
விஐபிகளுக்கு வெண்ணெய்! மக்களுக்கு சுண்ணாம்பு! சித்திரை திருவிழா ஏற்பாட்டில் அலட்சியம் -செல்லூர் ராஜு
மாமன்றம்
பொதுவாக சட்டமன்றத்தில் எடுத்துக்கொண்டால், கட்சிகளின் எண்ணிக்கையை பொறுத்து எதிர்க்கட்சிக்கு இருக்கைகள் அளிக்கப்படும்.. அதுபோல் இதுபோன்ற மாமன்றங்களிலும் இடம் ஒதுக்கப்படும்.. அதிமுக சார்பில் 15 மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.. ஆனால் அவர்களுக்கு சரியாக இடம் கொடுக்கப்படவில்லை.. இதுகுறித்து மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் முறையிட சென்றிருக்கிறார்கள்..
திமுக மேயர்
அதை படம் பிடிக்க சென்ற ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை, திமுக மேயர் அலுவகத்தில் இருந்த குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.. இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த நிருபர் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர்.. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.. செய்தியாளர்களை குண்டர்கள் தாக்குவதுதான் திமுகவின் திராவிட மாடலா?
தினகரன் பத்திரிகை எரிப்பு
இதேபோலத்தான் இதே மதுரையில் தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவத்தில் மூன்று அப்பாவி பத்திரிக்கையாளர்கள் இறந்தனர்.. மதுரை மேயர் அலுவலகத்தில் மேயருக்கும், திமுக குண்டர்களுக்கும் என்ன தொடர்பு? இதை ஆணையாளர் எதையும் கண்டுகொள்ளவில்லையே ஏன்? அது மட்டுமல்லாது நான் இது குறித்து முறையிட ஆணையாளரை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.. மாமன்ற செயலாளரை தொடர்பு கொண்டால் அவர் உரிய பதில் கொடுக்கவில்லை.
தலையீடு
உள்ளாட்சி பிரதிநிதிகளின் கணவர்கள் நிர்வாகத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று முதல்வர் சொல்லி உள்ளார்.. ஆனால் இங்கு மேயர் கணவர் தலையீடு செய்கிறாரே.. நேற்று நடந்த சம்பவத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்கள் குடும்பம் என்னவாகும்? 2 முறை கூட்டம் நடைபெற்றுள்ளது.. ஆனால் முறையாக அதிமுக உறுப்பினர்களுக்கு உரிய அழைப்புகளும், இருக்கைகளும் கொடுக்கவில்லை
இருக்கைகள்
வருகின்ற கூட்டங்களில் முறையாக இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்.. இதுபோன்று உறுப்பினர்களுக்கு உரிய இடம் கொடுக்காமலும், பத்திரிக்கையாளர்கள் இதுபோன்று தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அம்மாவின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதல்படி நிச்சயம் மதுரை மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்
திராவிட மாடலா?
மாநில சுயாட்சி பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசுறாரே.. ஆனால் 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட 2 லட்சம் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கொண்ட கூட்டுறவு அமைப்பின் அதிகாரத்தை பறிக்க அதிகாரிகளை நியமிக்கிறார்கள்.. அதேபோல் ஐந்தாண்டு இருந்த அதிகாரத்தை 3 ஆண்டு என்று சட்டத்தை திருத்துகிறார்கள்.. மதுரை மக்களின் வளர்ச்சிக்கு எந்த திட்டங்களை செய்யாமல் அரசு மெத்தனமாக இருந்தால், மதுரை மாவட்டத்தில் 5 சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் உள்ளோம்.. நிச்சயம் போராடி திட்டங்களை செயல் படுத்துவோம்" என்றார் செல்லூர் ராஜு.