பாவம்னு சொல்லாதீங்க.. ஓபிஎஸை தரக்குறைவாகப் பேசக்கூடாது.. டென்ஷனான செல்லூர் ராஜூ!
மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறையாக பேசக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக கூறியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நிகராக எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், ஓபிஎஸ் போன்ற அரசியல் தலைவரைப் பார்த்து பாவம் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் வெளியேறி இருக்கிறார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வந்த போதும் கூட ஓபிஎஸ் தரப்பைச் சந்திப்பதை தவிர்த்திருக்கின்றனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ் தரப்பை அதிமுக சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனால் அரசியலில் ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென முதல்வர் ஸ்டாலினை 2 முறை சந்தித்திருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்வதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் சேர்க்கப்படாதது தென் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஓபிஎஸ் தனித்துவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மக்களே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இணையாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திலும் மக்கள் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. அதிமுகவை பொறுத்தவரைக் கூட்டணி முக்கியமல்ல. மக்கள்தான் எஜமானர்கள். அவர்களின் உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்கு மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக போல வேறு எந்த கட்சியிலும் பூத் கமிட்டி கிடையாது.
கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் தொகுதி பங்கீட்டில் கூட சிக்கல் வரலாம். அதனால் தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு இல்லாமல் கூட கூட்டணி பிரியலாம் என்று கூறினார். தொடர்ந்து ஒரு காலத்தில் உங்களையெல்லாம் வழிநடத்திய ஓபிஎஸ் பாவமில்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்ட, செல்லூர் ராஜூ ஆவேசம் அடைந்தார்.
அரசியல் தலைவர்களை பார்த்து பாவம் என்று சொல்லக் கூடாது. யாரையும் தரக்குறைவாகப் பேசக் கூடாது என்று கோபமடைந்தார். அதன்பின் உடனடியாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மதுரையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாளர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அவரை அதிகமாக விமர்சிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் செல்லூர் ராஜூ இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications