பல ஆயிரம் கோடி நஷ்டம்.. மின்துறையை எப்படி சீரமைக்கலாம்?.. பிடிஆருடன் செந்தில் பாலாஜி ஆலோசனை!
மதுரை: மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராமப்புறம்
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாத காலம் மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவற்றை தற்போது 10 நாட்களில் செய்து முடித்துள்ளோம். கிராமப்புறங்களில் புதிதாக மின் இணைப்பை பெறுபவர்களுக்கு மின் கம்பம் மின் மாற்றியை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய செலவு தொகையை மின்நுகர்வோரிடம் பெறும் நிலை மாற்றப்பட்டுள்ளது.

மீட்டர் ஸ்மார்ட்
தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் இருக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் இலக்கும். உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும் விநியோகமாகும் மின்சாரத்திற்கும் இடைவெளி அதிகமாக உள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு வந்துள்ளது.

மின் கணக்கீடு
இந்த இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்யப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் இழப்பை சரி செய்ய விரைவில் ஆய்வு செய்து சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடனுக்கு வட்டி
மின்வாரியம் பெற்றுள்ள 1.59 லட்சம் கோடி கடனுக்கு 9.6 சதவீதம் வட்டி என ரூ 15 ஆயிரம் கோடி ஆண்டுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மின்வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையால் வட்டித் தொகையில் ரூ 2 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது என்றார் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications