வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.. 11 மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவு.. பொதுமக்கள் கடும் அவதி
மதுரை: மதுரையில் நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் மதுரையில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வளிமண்டல சுறழ்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றை தினம் மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

குறிப்பாக மதுரையில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு மாலையில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது.
அதாவது மாலை 3 மணிக்கு மதுரையின் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. விடாமல் தொடர்ந்து 5 மணிநேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று வீடு திரும்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக மதியம் 3 மணி முதல் 3.15 மணி வரை வெறும் 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மதுரையில் 10 சென்டிமீட்டர் மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக மதுரையின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. செல்லூர், அன்னையூர், ஆபிசர் டவுன், முல்லை நகர், பீபீ குளம், அத்திகுளம், சர்வேயர் காலனி, ஒத்தக்கடை, காந்தி நகர், பார்க் டவுன், பாரதி நகர், ஜிஆர் நகர், சூர்யா நகர், நாராயணபுரா, விஸ்வசாந்தி நகர் பகுதிகளிலும் மழைநீர் வீடு, மருத்துவமனை, கடைகளை சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பல இடங்களில் முட்டளவுக்கு மழைநீர் தேங்கி வடியாமல் நின்றது. இதனால் பொதுமக்களால் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்துக்கு முக்கிய காரணம் அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி சரியாக இல்லாமல் இருப்பது தான் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே மழை வெள்ளம் பற்றி தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோல் நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அவசரமாக ஆலோசனை மேற்கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் இன்றைய தினமும் மதுரைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் கோட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications