மதுரை ரயில் தீவிபத்து: டிராவல்ஸ் ஏஜென்சி மீது வழக்குப் பதிவு.. உரிமையாளரை கைது செய்ய உத்தரவு
மதுரை: மதுரை ரயில் தீவிபத்தில் 10 பேர் தீயில் கருகி பலியான விபத்தை தொடர்ந்து இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா ரயிலில் 65 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். இவர்கள் மதுரை புனலூர் அருகே இணைப்பு பெட்டிக்காக காத்திருந்தனர்.

இந்த இணைப்பு பெட்டி மூலம் சென்னைக்கு செல்லவிருந்தனர். இணைப்பு பெட்டிக்காக காத்திருந்த இந்த பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி குபுகுபுவென எரிந்தது.
இதனால் ரயில் பெட்டிகளில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்றனர். தீ அதிகமாக இருந்ததால் அவர்களால் ரயில் பெட்டி அருகே நெருங்கக் கூட முடியவில்லை. இதையடுத்து போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தீவிபத்திற்கு சிலிண்டர் வைத்து டீ போட முயற்சித்த போது கேஸ் லீக்காகி தீபிடித்ததே காரணம் என சொல்லப்படுகிறது. பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருக்கும் போது இவர்கள் அடுப்பு, சிலிண்டர், விறகுகளை எப்படி கொண்டு சென்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த குழுவினர் தங்களுடன் இரு சமையல்காரர்களை அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து தகவலறிய இலவச உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலிண்டர் கொண்டு வந்தது குறித்து சமையல்காரர் மீதும் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் மதுரை ரயில் தீவிபத்து குறித்து சுற்றுலா பயணிகளை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம்தான் இவர்கள் உ.பியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். எனவே அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் அதன் உரிமையாளரை கைது செய்யுமாறு தெற்கு ரயில்வே லக்னோ போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications