திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு.. அடுத்தது என்ன?
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளில், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நிலையில், நீதிபதி ஸ்ரீமதி, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்காக வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்க கூடாது இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக் கூடாது என்று காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
இதன்பின் மதுரையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.
சிக்கந்தர் பாதுஷா தர்கா
இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கை
மேலும் இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். அதேபோல் திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
சமணர் மலை
திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க கோரியும், திருப்பரங்குன்ற மலையை சமணர் குன்று மலை என அறிவிக்கக்கூடிய மனுவும், இதேபோல சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்; சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை
இந்த மனுக்கள் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடவுள்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில மனிதர்களே சரியாக இல்லை என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் வந்த போது, நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
மாறுபட்ட தீர்ப்பு
ஆனால் நீதிபதி ஸ்ரீமதி மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதில் வழக்கின் விசாரணை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுவதாக உத்தரவிட்டார். இந்த நிலையில் 3வது நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications