அரசு நிலங்களை ஆக்கிரமிக்க உதவிய அதிகாரிகள்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை- ராமநாதபுரம் சாலை விரகனூர் சந்திப்பில் வைகை ஆற்று நீர்நிலை பகுதியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், தானாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்து. இது தொடர்பாக அதிகாரிகளை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைகிளை, சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராமநாதபுரம் சாலை விரகனூர் சந்திப்பில் வைகை ஆற்று நீர்நிலை பகுதியில் கட்டிடம் கட்டப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.
தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்காகவோ, நீர்நிலையாகவோ இருந்தால் கட்டுமான அனுமதி முறைப்படி ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசு நிலம், அரசு புறம்போக்கு நிலம், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறித்து வருவாய்த்துறையினருக்குதான் தெரியும், அவர்களது துணையின்றி இந்த நிலங்களை ஆக்கிரமிக்கவோ, பட்டா பெறவோ, கட்டுமானம் மேற்கொள்ளவோ முடியாது என்று தெரிவித்தது.
மேலும் இதுபோல் அரசு நிலங்களை ஆக்கிரமிக்க, பட்டா பெற உதவிய அரசு அலுவலர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஆவணங்களை மாற்றம் செய்து பட்டா பெற்றது தெரியவந்தால் பட்டாவை ரத்து செய்து ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications