சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை.. அன்றைய தினம் நடந்தது என்ன? மருத்துவக் கல்வி இயக்குநர் பரபர தகவல்
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையிலான குழு முக்கிய விசாரணை நடத்தியது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 30) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது, மாணவர்கள் மருத்துவ உடை அணிந்த பின்னர் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியை வாசிக்க வேண்டும்.

சமஸ்கிருத உறுதிமொழி
ஆனால், அதற்கு மாறாகச் சமஸ்கிருதத்தில் 'மகரிஷி சரக சபதம்' என்ற உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மருத்துவக் கல்லூரியின் மாணவர் சங்க நிர்வாகியின் தவறு காரணமாக இது நடந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகக் கல்லூரி முதல்வரைக் கட்டாயக் காத்திருப்பில் வைத்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம் ஆகிய 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குக் குழு நேற்று (மே 3) தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரத்தினவேல், பொறுப்பு முதல்வரும் துணை முதல்வருமான தனலெட்சுமி, மாணவர் பேரவை அமைப்பினரிடம் எழுத்துப்பூர்வ அறிக்கை பெற்றனர்.

தவறான உறுதிமொழி
விசாரணைக்குப் பின்னர் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு அளித்த பேட்டியில், "இந்த விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இணையத்தில் இருந்து மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் கொண்ட உறுதிமொழியைத் தவறுதலாகப் பதிவிறக்கம் செய்து, அதை உறுதி மொழியாக வாசித்துள்ளனர்.

உத்தரவு இல்லை
தேசிய மருத்துவ ஆணையம் உறுதிமொழி தொடர்பாக அனுப்பியது உத்தரவு இல்லை, சுற்றறிக்கை மட்டுமே. எனவே, இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறையிடம் ஆலோசித்து இருக்க வேண்டும். அதைவிடுத்து அந்த சுற்றறிக்கையை அப்படியே பின்பற்றியது தவறு. அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை அப்படியே பின்பற்ற வேண்டும்.
Recommended Video

பிற கல்லூரிகள்
இங்க மட்டுமின்றி வேறு சில கல்லூரிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. தவறுதலாக உறுதிமொழி எடுத்த மற்ற கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உறுதிமொழி ஒத்திகையின் போது, இப்போது பொறுப்பு முதல்வராக இருக்கும் தனலெட்சுமி களத்தில் இல்லை என தெரிவித்துள்ளார். எங்கள் விசாரணை அறிக்கை அடிப்படையில் ரத்தினவேலை மீண்டும் முதல்வராக நியமிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்" என்றார்.












Click it and Unblock the Notifications