விசாரணை முடிந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்... உறவினர்கள் ஆவேசம்
மதுரை: மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை வழிபறி வழக்கில் போலீசார் கைது செய்த நிலையில் போலீஸ் விசாரணை முடிந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் கார்த்திக் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் தாக்கியதே அவரது இறப்பிற்கு காரணம் என அவருடைய உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை யாகப்பா நகர் சக்திமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவருடைய மகன் கார்த்திக் என்ற இட்லி கார்த்திக்கிற்கு 32 வயது ஆகிறது. இவருடைய மனைவி கமலாபிரியா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கார்த்திக் மீது மதுரை காவல் நிலையங்களில் சில வழக்குகள் இருக்கின்றன.

உடல்நலக்குறைவு: கடந்த 3-ந்தேதி, வழிப்பறி வழக்கில் கார்த்திக்கை மதிச்சியம் போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து சிறையில் இருந்த கார்த்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உயிருக்கு போராடினார்.
கார்த்திக் மரணம்: இதனை தொடர்ந்து சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று காலை திடீரென உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
கார்த்திக் எப்படி இறந்தார்: அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும், அதனால் கார்த்திக் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில்வ கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்,.
உறவினர்கள் மறியல்: இதனிடையே சிறைக்கு சென்ற கார்த்திக் உயிரிழந்த தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை முன்பு திரண்டனர். காவல் நிலையத்தில், விசாரணையின்போது போலீசார் தாக்கியதே அவர் இறப்பிற்கு காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரதான சாலையில் அமர்ந்து மறியலும் செய்தனர். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
மாஜிஸ்திரேட்டு விசாரணை: சிறையில் இருந்தவர் உடனே இறந்தது எப்படி என்று மாஜிஸ்திரேட்டு கல்யாணமாரிமுத்துவும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். கார்த்திக்கின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார். இதனிடையே கார்த்திக் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்க்ள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில்தான் கார்த்திக் இறப்பு குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என்பதால் அதற்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications