ஷாக் ட்விஸ்ட்! பெண் காவலர் தற்கொலையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்: ஆண் நண்பரான தலைமை காவலரும் தற்கொலை!
மதுரை: மதுரையைச் சேர்ந்த ரயில்வே பெண் காவலர் தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆண் நண்பரான தலைமைக் காவலர் இன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரயில்வே பெண் காவலர் ஜெயலெட்சுமி. இவர் தனது கணவர் சுப்புராஜ் மற்றும் பவித்ரா (11), காளிமுத்து (9) ஆகிய இரு குழந்தைகளுடன் மதுரை திருப்பாலை அய்யர் பங்களா பகுதியில் வசித்து வந்தார். மதுரை ரயில்வே போலீசில் பணிபுரிந்த ஜெயலட்சுமி, கடந்த 20 நாட்களாக தேனூரில் உள்ள தனது தாய் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை, தேனூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் ஜெயலட்சுமி. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜெயலட்சுமி மதுரையில் இருந்து திருச்சிக்கு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் மாறுதலான இடத்திற்கு செல்லாமல் அவர் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதற்கிடையில், தான் அவர் நேற்று 2 குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். பணியிட மாற்றம் காரணமாக மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட காவலர் ஜெயலட்சுமி, அவரது கணவர் சுப்புராஜுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலரான கோவில்பட்டியை சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் நெருக்கமாக பழகி வந்தது ஜெயலட்சுமியின் கணவர் சுப்புராஜுக்கு தெரிய வந்ததால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தலைமைக் காவலர் சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இந்த விவகாரம் அவரது மனைவிக்கும் தெரிய வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு அவரது மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சொக்கலிங்க பாண்டியன் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். அங்கு சென்ற பிறகு, ஜெயலட்சுமி உடன் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த நிலையில் தான் திருச்சிக்கு மாற்றலாகியுள்ளார் ஜெயலட்சுமி. இந்நிலையில், நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன், ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை அடுத்து அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்தே, அவமானம் தாளாமல் காவலர் ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஜெயலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த தலைமைக் காவலர் சொக்கலிங்க பாண்டியன், சாத்தூர் அருகே சின்னக் கொல்லப்பட்டி பகுதியில் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு அஞ்சி, சொக்கலிங்க பாண்டியன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ரயில்வே பெண் காவலர் ஜெயலட்சுமி, தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்த தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications