சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்?
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர் சி களமிறங்கியுள்ள நிலையில், அவருக்காக பணியாற்ற அதிமுக நிர்வாகிகளான மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி தரப்பு இறங்கி இருக்கிறது. அதேபோல் இயக்குநர் சுந்தர் சி பல்வேறு சமூக அமைப்புகளையும் நாடி ஆதரவு கோரி வருகிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவதால், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிச்சயம் சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் முதலில் அதிமுக நேரடியாக களமிறங்குவதாக இருந்தது.

அண்மையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பி.எம்.மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோருக்கு உடனடியாக கட்சியில் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
இருந்தாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், பி.என்.மன்னன் தரப்பு அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி மற்றும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் ஆகியோர் நேரடியாக சென்று முன்னாள் துணை மேயர் பிஎம் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தங்களுக்காக மதுரை மத்திய தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதேபோல் இயக்குநர் சுந்தர் சி மற்றும் ஏசி சண்முகம் தரப்பில் கடந்த 2 நாட்களாக பல்வேறு சமுதாயங்களின் முக்கிய நிர்வாகிகளையும், தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதனால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இயக்குநர் சுந்தர் சி சவால் கொடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் மீது இன்னும் பழைய சாயங்கள் போகவில்லை. மதுரையில் கந்துவட்டி, பஞ்சாயத்து செய்த சுவடுகள் மறையாமல் இருந்ததாலே, இருவரையும் திமுகவில் சேர்க்க ஸ்டாலின் மறுத்தார். தற்போது தேர்தல் பணிகளை சுந்தர் சிக்காக செய்வது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications