பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அட்டாக் செய்தால் போதுமா.. சினிமா பாணியில் அரசியல் செய்யும் சுந்தர்.சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் சுந்தர்.சி சினிமா பாணியில் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒவ்வொரு நேர்காணல், மேடைகளிலும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மட்டுமே அட்டாக் செய்யும் சுந்தர்.சி, ஆக்கப்பூர்வமாக அரசியலையோ கொள்கையையோ பேசவில்லை என்று சாமானிய மக்களிடையே குரல்கள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கடைசி கட்ட பிரச்சாரங்கள் உச்சத்தில் இருக்கிறது. மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கி இருக்கிறார்.

வேட்பாளராக அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு வரை சுந்தர்.சி சினிமா ஷூட்டிங்கில் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் சுந்தர்.சி-க்கு எப்படி சீட் கிடைத்தது என்பதே அக்கட்சியில் பலருக்கும் ஆச்சரியம். ஒருபக்கம் நடிகை குஷ்பு மூலமாக சுந்தர்.சி-க்கு வாய்ப்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. பாஜக சார்பாக இம்முறை குஷ்புவுக்கு சீட் கிடைக்காது என்று தெரிய வந்திருக்கிறது.
இதனால் புதிய நீதிக் கட்சியுடன் நெருக்கம் காட்டி வந்த குஷ்பு, ஏசி சண்முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கணவர் சுந்தர்.சி-யை வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அரசியலுக்கு வந்த சுந்தர்.சி தொடக்கத்தில் மதுரை மாநகராட்சி தொடர்பான பிரச்சனைகளை கையில் எடுத்தார். அது மக்களிடையே வரவேற்பை பெற்றது.
ஆனால் அதன்பின் சுந்தர்.சி நேரடியாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அட்டாக் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்ரிக்காகியது சுந்தர்.சி-க்கு ப்ளஸாக மாறியது. சமூக ரீதியிலான வாக்குகளையும் பெற சுந்தர்.சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் சுந்தர்.சி-க்கு அதுவே பின்னடைவாக மாறி இருக்கிறது.
ஏனென்றால் சுந்தர்.சி மற்றும் குஷ்பு இருவருமே பொது வாழ்க்கையில் பெரியளவில் உதவிகளை செய்ததே கிடையாது. அதேபோல் சமூகப் பற்றையும் வெளிப்படுத்தியது இல்லை. இதனால் சமூக அமைப்புகள் சுந்தர்.சி-யின் பேச்சை நம்ப மறுக்கின்றன. அவர் பின்னணியில் ஏசி சண்முகம் இருந்தாலும், மதுரை மக்கள் அவர் பின் திரள தயக்கம் காட்டி வருகின்றனர்.
அதேபோல் சுந்தர்.சி-யும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அட்டாக் செய்வதையே முழு நேர பணியாக செய்து வருகிறார். ஆக்கப்பூர்வமான திட்டங்களையோ, கொள்கையையோ கூட பிரச்சாரத்தில் பேசுவதில்லை. மேம்போக்காக சில பிரச்சனைகளை மட்டுமே பேசி வருகிறார். இதனால் சுந்தர்.சி-யின் அரசியல் சினிமா பாணியில் இருப்பதாக மதுரை மக்களிடையே பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications