சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு
மதுரை: சுந்தர்.சி களத்திற்கு வந்த பின் அரசியலும், வரலாறும் எவ்வளவு தெரியும் என்பது சாமானிய மக்களுக்கும் புரியும் என்று பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். கணவர் சுந்தர்.சி தான் தன்னுடைய முதுகெலும்பு என்று கூறியுள்ள குஷ்பு, புதிதாக களத்திற்கு வந்துள்ள விஜய்க்கு அவ்வளவு ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் இயக்குநர் சுந்தர்.சி களம் கண்டுள்ளதால் மதுரை மத்திய நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. என்டிஏ கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக சுந்தர்.சி களமிறக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் தவெக தரப்பில் முஸ்தபா களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று சுந்தர்.சி தாக்கல் செய்தார். அப்போது சுந்தர்.சி உடன் அவரது மனைவி குஷ்புவும் இருந்தார். அதேபோல் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இருந்தார். மதுரை மத்திய தொகுதி தொடர்பாக பெரியளவில் ஏதும் அறியாததால், இயக்குநர் சுந்தர்.சி முதற்கட்டமாக சமூகம் சார்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர்.சி வேட்புமனு தாக்கலுக்கு பின் சுந்தர்.சி பேசுகையில், நான் இனிமே வெளியூர்க்காரன் இல்லை. மதுரைக்காரன் என்று தெரிவித்துள்ளார். இதன்பின் நடிகை குஷ்பு பேசுகையில், மனைவி என்ற முறையில் சுந்தர்.சி தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி தான். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சுந்தர்.சி தான் என்னுடைய முதுகெலும்பு.
அரசியல் பற்றி சுந்தர்.சி-க்கு என்ன தெரியும் என்று நினைப்பார்கள்.. ஆனால் அவர் களத்திற்கு வந்த பின் அரசியலும் வரலாறும் எவ்வளவு தெரியும் என்பது அனைவருக்கும் புரியும். பாஜக சார்பாக இம்முறை நான் போட்டியிடவில்லை. ஆனால் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். மதுரையில் சுந்தர்.சி போட்டியிடுவதால் நான் வந்திருக்கிறேன்.
எனக்கு பாஜகவில் சீட் கொடுத்திருந்தால், அந்த தொகுதியிலேயே முடங்கி இருப்பேன். ஆனால் என்னை பொறுத்தவரை என்டிஏ கூட்டணி அதிகம் வெல்ல வேண்டும். யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கிய கிடையாது. பாஜக தொண்டராக அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன். அதேபோல் விஜய் முதல்முறையாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை பார்க்க மக்கள் கூட்டமாக வருகிறார்கள்.
ஆனால் களத்தில் திமுக, அதிமுக மட்டுமே உள்ளது. அதனால் திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி இருப்பதாக நினைக்கிறேன். விஜய்யாக இருந்தாலும், சுந்தர்.சி-யாக இருந்தாலும் மே 4ஆம் தேதி முடிவு தெரிந்துவிடும். எங்களை பொறுத்தவரை என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications