தாட்கோ கடனுதவி.. பெட்டிக்கடை வைக்க ரூ.5 லட்சம் அரசு லோன் தேவை.. மதுரை கலெக்ரிடம் கேட்டது யார் பாருங்க
மதுரை: கிளி சோதிடம் நிறுத்தப்பட்டதால் தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிளி ஜோதிடர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவும் அளிக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கிளி ஜோதிடத்தில் பலருக்கும் நம்பிக்கை இருந்து வருகிறது. எனவே கிளி ஜோதிடம் பார்க்கும் பழக்கமும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், கூண்டில் கிளிகளை அடைப்பதற்கு சட்டப்படி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன..

மக்கள் குழப்பம்: இது பொதுமக்களுக்கு மிகுந்த குழப்பத்தை தந்துவிடுகிறது.. கிளிகள் வளர்ப்பது குற்றமா? இல்லையா? என்று மக்களே அவ்வப்போது குழம்பி விடுகிறார்கள்.
கிளி மட்டுமல்ல, எந்தவகையான பறவைகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் குற்றம் என்று வனத் துறையினர் கண்டிப்புடன் சொல்கிறார்கள். கடந்த 1990 - 91ல் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், கிளிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. அதனால்தான், இன்னமும் நிறைய பேர் கிளிகளை வளர்த்து வருகிறார்கள்..
அபராதம்: எனவே, விதிமுறைகள் தெரியாமல், வீடுகளில் யாராவது கிளிகளை வளர்த்தால், தாங்களாக முன்வந்து அவற்றை விடுவிக்க வேண்டும் என்றும், அதையும் மீறி வீடுகளில் வளர்த்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக வனத்துறை அதிகாரிகள், வனத்துறை விலங்குகள் சட்டத்தின் கீழ் வீட்டில் கிளி வளர்ப்பதோ, அதனை விற்பனை செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதம்: மதுரையில் கிளிகளை பறிமுதல் செய்வதும், அவற்றை சட்டவிரோதமாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிப்பதும் தொடர்கிறது. இதனால் கிளி ஜோதிடத்தை வருவாய் ஆதாரமாகக் கொண்ட பலரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கூறி, மாவட்ட கலெக்டரிடம் தற்போது புகார் கொடுத்துள்ளனர்.. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "வனத்துறை அதிகாரிகள் ஜோதிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட கிளிகளை பறிமுதல் செய்துவிட்டார்கள். இதனால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே, தமிழக அரசு மூலமாக தாட்கோ மூலம் கடனுதவி செய்தால் மாற்றுத் தொழில் கடனுதவி அளித்தால் எங்கள் வாழ்வாதாரத்தை சரிசெய்து கொள்வோம். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அடிக்கிறார்கள்: இதையடுத்து, தமிழ்நாடு குறவர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாங்கள் ஜோதிடத்திற்கு பயன்படுத்தி வந்த கிளிகளை வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி வனத்துறையினர் பறிமுதல் செய்ததால் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம்.. வனத்துறையினர் கிளியை பறிமுதல் செய்யும்போது, எங்களை அடிக்கிறார்கள்.
பரம்பரை பரம்பரையாக செய்யப்பட்ட கிளி சோதிடம் நிறுத்தப்பட்டதால் தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிளி ஜோதிடர்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். தாட்கோ மூலம் தமிழக அரசு எங்களுக்கு கடனுதவி செய்தால் ஜவுளிக்கடை, பெட்டிக்கடை என ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக் கொள்வோம்
கடனுதவி: சில மாதங்களாகத்தான் இந்த பிரச்சனை உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் கிளியும் உள்ளதால் பறிமுதல் செய்கின்றனர். எலி இந்தப் பட்டியலில் இல்லாததால், எலி ஜோதிடத்திற்கு பிரச்சனை இல்லை. எங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால், மாற்றுத் தொழில்புரிய, குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு தாட்கோ மானியத்துடன் ரூ.5 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications