சிறுவன் பலி எதிரொலி.. துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது..ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் என்ற கூலித் தொழிலாளியின் மகன் புகழேந்தி.
11 வயதான புகழேந்தி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் கடந்த டிச. மாத இறுதியில் மாணவர் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரது வீட்டில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. கடந்த டிச. 30ஆம் தேதி, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சிறுவன் தலையில் பாய்ந்துள்ளது.
இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய சிறுவனைப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குக் கடந்த டிசம்பர் 31இல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலையிலிருந்த தோட்டாக்கள் அகற்றப்பட்டன. இருப்பினும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஜன. 3ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
இந்தச் சூழலில் சிறுவனுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் மையத்தை மூடக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
முதல் வாரத்திலேயே பலருடைய வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்...இதுதான் காரணமா
அப்போது தமிழக அரசு சார்பில் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் பயன்படுத்தப்படாது என்றும் அந்த பயிற்சி மையம் டிச. 30ஆம் தேதியே மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்று, இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.