தவெக மாநாட்டில் சோறெல்லாம் போட மாட்டோம்.. குடிக்க தண்ணீர் மட்டும் தான்! போலீசிடம் சொன்ன நிர்வாகிகள்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு கட்சி சார்பில் மாநாட்டு திடலில் உணவு வழங்கப்படாது எனவும், தொண்டர்களை அழைத்து வரும் மாவட்ட செயலாளர்களே உணவு வழங்குவார்கள் என காவல்துறையிடம் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசியலில் புதுவரவான, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இந்த மாதம் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்திருக்கிறார். மதுரையில் மாநாடு என விஜய் அறிவித்த போது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. காரணம் விஜயின் சினிமா வழிகாட்டியான விஜயகாந்த் பிறந்தது மதுரையில் தான்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுரையில் இருந்துதான் விஜயகாந்த் தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் மாநில மாநாடு அரங்கேறியதும் மதுரையில் தான். ஆனால், சில காரணங்களால் மாநாட்டு தேதி 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்
மாநாட்டுக்காக விருதுநகர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 300ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடும், 200 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட இருக்கிறது. மாநாட்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளுக்காக தனியாக 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
மதுரை மாநாடு
தன்னார்வலர்களாக பத்தாயிரம் பேரும், 500 பேர் மருத்துவ பணியிலும் ஈடுபட இருக்கின்றனர் என்கின்றனர் மதுரை மாவட்ட நிர்வாகிகள். இந்த நிலையில் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்து இருக்கிறது. 42 கேள்விகள் காவல்துறை தரப்பில் எழுப்பப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் அதற்கான விளக்கத்தை தந்திருக்கிறது. மாநாட்டில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4500 முதியவர்கள் 500 மாற்றுத்திறனாளிகள் வரை பங்கேற்பார்கள் எனவும், குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டிருக்கிறது.
உணவு வழங்கப்படாது
மாநாட்டுக்கு ஒரு லட்சம் நாற்காலிகள் மட்டுமே அமைக்கப்படும் எனவும் 18 வழிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக மாநாட்டு திடலில் யாருக்கும் உணவு வழங்கப்படாது எனவும் தொண்டர்களை அழைத்து வரும் மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவு ஏற்பாடு செய்வார்கள் என கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மூன்று இடத்தில் பார்க்கிங், 400க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள், நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும் எனவும் தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
இரண்டாவது மாநில மாநாடு
மதுரையை பொருத்தவரை எந்த கட்சி மாநாடு நடத்தினாலும் உணவு அதில் பிரதானமாக இருக்கும். திமுக தரப்பில் அசைவிருந்தும், அதிமுக தரப்பில் சைவ விருந்தும் அளிக்கப்படும். கடந்த ஆண்டு அதிமுக மாநாடு நடைபெற்ற போது சைவ உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நெரிசல் மற்றும் சில விவகாரங்களை தவிர்ப்பதற்காகவே தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் உணவு வழங்கப்படவில்லை என்கின்றனர் அக்கட்சியினர்.












Click it and Unblock the Notifications