திமுக முருகர் புகைப்படம் வைக்குமா?.. பெரியார் படம் அகற்றம் குறித்து தமிழிசை விளக்கம்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். மதுரை அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நுழைவு வாயிலில் இருந்த பெரியார் புகைப்படம் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும், வரவேற்கும் பூமி. சாதாரண கிராமத்திற்கு சென்றால் கூட வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் அவர்கள் அமர்வதற்கு திண்ணை போடப்பட்டிருக்கும். தமிழ் தமிழ் என்று முதலமைச்சர் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் காழ்புணர்ச்சி
தமிழ்நாடு வரும் பிரதமரை வரவேற்பதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்சனை. தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை. பிரதமர் ஏதோ அரசியலுக்காக தமிழ்நாடு வரவில்லை. தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்துவதற்காக வருகிறார். எதுவும் தரவில்லை தரவில்லை என்கிறீர்கள்.
திட்டத்திற்காக வரும் பிரதமரை வரவேற்பது புரோட்டோகால். அதைக் கடந்து அது ஒரு பண்பு. இதை என்னால் ஏற்க முடியவில்லை. இதேபோல் இருந்த தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் இன்றைக்கு வீட்டில் இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டும் என யாரும் தேடுவதில்லை. தனிப்பட்ட காழ்புணர்ச்சி அரசியல் ஒழிய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
திமுக முருகர் படம் வைக்குமா
ஒரு நல்ல கலாச்சாரம் திமுகவால் மறைக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளை பாஜக அடிமைப்படுத்துகிறது என்று புகார் கூறி வருகின்றனர். நாங்கள் ஜனநாயக முறைப்படி கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி கட்சிகளை அவர்களின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். கூட்டணி கட்சிகளுக்க யார் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த திமுக அரசு எல்லாவற்றிலும் பணம் செலவு செய்து விளம்பரம் மட்டும் தான் செய்கிறது. திமுக கூட்டணியை தேஜகூ வீழ்த்தும். இன்னும் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம். மாநாடு நடத்துவோர் தான் அதில் யாருடைய படம் இடம்பெற வேண்டும் என முடிவு செய்வார்கள். திமுக கூட்டங்களில் எல்லா இடங்களிலும் முருகர் படம் வையுங்கள் என்றால் வைப்பார்களா.
மரியாதை கொடுப்போம்
மதுரையில் கூட்டம் நடத்தினால் மீனாட்சி அம்மன் படத்தை வைப்பார்களா. எங்கள் கூட்டத்தில் எந்த தலைவரின் படம் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நாங்கள் அனைத்துத் தலைவர்களுக்கும் மரியாதை கொடுப்போம். ஆனால் எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக உள்ள ஒருவரின் படம் இருக்க வேண்டுமா என யோசித்தோம். அவ்வளவுதான்" என்றார்.












Click it and Unblock the Notifications