One India Impact: தஞ்சாவூர் சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை! முதல்வர் ஸ்டாலின் உதவி!
மதுரை: ஒன் இந்தியா தமிழ் செய்தி எதிரொலியாக தஞ்சாவூரை சேர்ந்த சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சையை சேர்ந்த 12 வயது சிறுவன் எலும்பு மஜ்ஜை நோயால் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. இது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் அந்த சிறுவனை அணுகிய போது, தனக்கு ரத்தம் ஊறவில்லை, உடல் சோர்வாக இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் உடம்பு நல்லாயிடும் என்றும் கண்ணீர் விட்டார்.

மேலும் தனக்கு 12 வயதானாலும் 8 வயதுக்குரிய வளர்ச்சியே இருப்பதாகவும் தன்னுடன் படிக்கும் சகமாணவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக கண்ணீர் மல்க கூறியிருந்தார். சிறுவனின் உடல்நிலை குறித்து தாய் பேசுகையில், எனது மகனுக்கு ரத்தம் ஊறவில்லை, எது சாப்பிட்டாலும் உடலில் தங்க மாட்டேங்கிது.
அவனுக்கு எலும்பு மஜ்ஜையில் பிரச்சினை இருப்பதாக சொன்னார்கள். கடந்த 4 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனாலும் இந்த பிரச்சினை சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் அவரது உடலுக்கு பொருத்தமான எலும்பு மஜ்ஜை கிடைக்கவில்லை என்பதாலும் சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாலும் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துக் கொள்ளுமாறு அரசு மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனால் தனியார் மருத்துவமனையை நாடிய போது எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு 12 லட்சம் செலவாகும் என கூறிவிட்டனர். எனது கணவர் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லை, அதனால் அவர் வீட்டில்தான் இருக்கிறார்.
எங்களால் ரூ 12 லட்சம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய இயலாது. எனவே அரசாங்கம் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருந்தார். சிறுவன், தாயின் வீடியோவை ஒன் இந்தியா தமிழ் இன்ஸ்டாகிராம் போஸ்டில் வெளியிட்டதும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதைப் பார்த்தனர். இந்த செய்தியை, முதல்வருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் டேக் செய்திருந்தோம்.
அந்த வகையில் ஒன் இந்தியா தமிழ் செய்தி எதிரொலியாக சிறுவனுக்கு முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அடுத்து சிறுவன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications