திடீர் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போகும் டாஸ்மாக் ஊழியர்கள்! மதுக்கடைகள் மூடப்படப் போகிறதா? வெளியான தகவல்!
மதுரை: தலைமைச் செயலகம் முன்பு பிப்ரவரி 11ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அந்த தினங்களில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படலாம் என்கின்றனர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்
தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் (AITUC) மதுரை தெற்கு வடக்கு மாவட்டம் சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி மகாலில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெறக் கூடிய காத்திருப்பு போராட்டத்திற்கான ஆயுத்த மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில பொருளாளர் செயலாளர் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் ஊழியர்கள்:
குறிப்பாக டாஸ்மாக்கில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்ததான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தின் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி.
காத்திருப்பு போராட்டம்:
அப்போது பேசிய அவர்,” பிப்ரவரி 10ஆம் தேதி டாஸ்மார்க் தலைமை அலுவலகம் முன்பிருந்த பணியாளர்கள் ஊர்வலம் புறப்படும். எத்தனை ஆண்டு காலம் பணி செய்தாலும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்திற்காக நாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்தித்து வருகிறோம். சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மார்க் பணியாளர்கள் இந்த காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.
மதுக்கடைகள் மூடப்படுமா?:
தமிழகத்தில் பல டாஸ்மாக் சங்கங்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போராட்டம் நடைபெறும் நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் அபாயம் இருக்கிறது. அதே நேரத்தில் பிற சங்க ஊழியர்களை வைத்து மதுக்கடைகள் மூடப்படாமல் விற்பனை நடக்கும் என்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.
டாஸ்மாக் விற்பனை:
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
பணி நிரந்தரமில்லை:
இப்படி அரசுக்கு அதிக லாபம் மற்றும் வருவாய் தரக்கூடிய துறையாக டாஸ்மாக் இருந்தாலும், அதன் ஊழியர்கள் யாருக்கும் நிரந்தர பணி கிடையாது. தற்போது அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி அடிப்படையில் தான் பணியாற்றி வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என பல பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்து இருந்தது. ஆனால் தற்போது வரை டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications