தம்பிதுரையா இது.. மோடியை பார்த்ததும் ஆளே மாறிப்போய்விட்டாரே!
Recommended Video
மதுரை: கடந்த சில மாதங்களாக மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தபோது மிகுந்த நெருக்கத்தை காண்பித்ததை பார்க்க முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று மதுரை வருகை தந்தார். மதுரை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்திறங்கிய மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
அதேபோல லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரையும் வரவேற்பு அளித்தார்.
|
புத்தகம் பரிசு
புத்தகம் ஒன்றை பரிசளித்து பிரதமர் மோடியை தம்பிதுரை வரவேற்றார். இன்முகத்துடன் மோடியை வரவேற்ற தம்பிதுரை, பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு இரு இருக்கைகள் தள்ளி தம்பிதுரை அமர வைக்கப்பட்டார். மோடிக்கு அடுத்ததாக ஆளுநர் பன்வாரிலாலும், அதற்கு அடுத்தபடியாக தம்பிதுரையும் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
|
குமுறல்
தம்பிதுரை காண்பித்த அன்பும், அவருக்கு மேடையில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், அதிமுக மற்றும் பாஜகவினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் நடுவேயும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களை அடிமைபோல நடத்தி வருகிறார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் குமுறிய தம்பிதுரையா இது என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
எதிர்ப்பு அரசியல்
பாஜகவை எதிர்ப்பது எல்லாம் வெறும் மீடியா ஸ்டண்ட் என்று எதிர்க்கட்சிகள் தம்பிதுரை குறித்து குற்றம்சாட்டிவந்தன. டிடிவி தினகரனோ, இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்தே நடப்பதுதான் என்று கூறியிருந்தார். ஆனால், இன்று எல்லாம் புஸ்வானமாகிவிட்டது.
ஒன்னுமில்லையாம்
இதுபற்றி, அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது, புரோட்டோக்கால் படி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. மற்றபடி யூகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாமே.. என்று தெரிவித்தனர்.