வெற்றிடம் திமுகவில் இல்லை.. முக ஸ்டாலின் தன் தலைமையை நிரூபித்துள்ளார்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி
திமுகவில் வெற்றிடம் இல்லை என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
மதுரை: "ரஜினி சொல்லும் வெற்றிடம் திமுகவில் இல்லை... நடந்து முடிந்த எம்பி தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் முக ஸ்டாலின் தனது தலைமையை நிரூபித்துள்ளார்.. தற்போது உள்ள சூழலில் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது... ஆனால் அதிமுகவில் தான் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை" என்று தங்க தமிழ்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி அருகே எழுமலை பக்கம் உள்ளது மல்லப்புரம்-மயிலாடும்பாறை மலைச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் எம்பியும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் அந்த சாலையை ஆய்வு செய்தார்.
முட்செடிகள்
பிறகு வனத்துறையினரை செல்போனில் தொடர்பு கொண்ட போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மண் சரிவு, புதர்கள், முட்செடிகளை அகற்ற வேண்டும், தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகளை செய்திட வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் தங்கதமிழ்செல்வனிடம் ரஜினிகாந்த பேச்சு, விஜய் வீட்டில் நடந்த ரெய்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்தை கேட்டனர். அதற்கு அவர் சொன்னதாவது:
குடியுரிமை
"வருமானவரித்துறை சோதனைக்கு பயந்தே திமுக கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது.... மத்திய அரசு மீது வைத்துள்ள பயத்தையே இது காட்டுகிறது. இதேபோல்தான் நடிகர் விஜய் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்கள் மத்திய அரசின் அதிகாரத்தின் வெளிப்பாடாக உள்ளது.
வெற்றிடம்
தமிழகத்தில் இரு பெரும் தலைவர்கள் மறைந்து விட்டதால் அரசியலில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை... வெற்றிடமாகத் தான் உள்ளது என்று ரஜினிகாந்த் சொல்கிறார்.. ஆனால் திமுகவில் அப்படி ஒரு வெற்றிடம் இல்லை... நடந்து முடிந்த எம்பி தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் முக ஸ்டாலின் தனது தலைமையை நிரூபித்துள்ளார்.. தற்போது உள்ள சூழலில் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது... ஆனால் அதிமுகவில் தான் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை.
குழப்பமான முடிவு
மக்கள் வரவேற்று அழைக்கட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.. முதலில் அவர் களத்தில் இறங்கட்டும்... அப்பறம் அடுத்து என்னவென்று பார்க்கலாம்... அவர் கட்சி ஆரம்பிக்க போவதை வரவேற்கிறோம்.. ஆனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் வெவ்வேறு தலைமை என்பதை ஏற்றக்கொள்ள முடியாது... அப்படி இருந்தால் கட்சியே ஒரு நிலைப்பாட்டுக்கு வராது... இது குழப்பமான முடிவாக அமையும்" என்றார்.