பாதாள சிறைச் சாலையா?.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கட்டிடம், பாதாள சிறைச்சாலையா? என ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக, 30 அடி அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணியின் போது, செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் சேர்த்து கட்டப்பட்ட பழமையான கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தூண்களும் உள்ளன.

பார்க்கிங் அமைக்கப்படும் இடத்தின் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை ஒன்று இருந்ததாகவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம், அந்த சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாநகரில் உள்ள வரலாற்று சுவடுகளை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5- ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான பழம்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பணிகள் நடந்து வருகிறது. இதில், பல பொக்கிஷங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழமையான கட்டிடம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications