சினிமா காட்சிபோல் பரபர சம்பவம் .. போலீசாரை அறையில் பூட்டி.. கைதியை தூக்கி சென்ற உறவினர்கள்!
மதுரை: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாட்சிதேவன் நகரைச் சேர்ந்தவர் மாரிஸ்வரன். கடந்த ஜூன் மாதம் உச்சிப்புளியில் உள்ள பேக்கரிக்கு வந்தார். பின்னர் அங்கு சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு முடித்தவுடன் அதற்கான பணத்தை கடை உரிமையாளர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிஸ்வரன் ''என்கிட்டயே பணம் கேட்கிறாயா? நான் யாரு தெரியுமா'' என்று கூறியபடி கடையில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார்.

கடையை அடித்து நொறுக்கினார்
கடைசியில் இருந்தவர்களுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட மாரிஸ்வரன் ஆவேசம் அடைந்த நிலையில் கடையில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக கடையின் உரிமையாளர் உச்சிப்புளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாரிஸ்வரனை தீவிரமாக தேடி வந்தனர்.

மாரீஸ்வரனை மடக்கிப்பிடித்தனர்
திருப்பூரில் தலைமறைவாக இருந்த மாரிஸ்வரன் சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார் இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த போலீசார் மாரீஸ்வரனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை
அங்கு எதிர்பாராதவிதமாக அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு விசாரணை கைதிகள் சிகிச்சைப் பிரிவில் மாரிஸ்வரன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மாரீஸ்வரனை பாதுகாப்பதற்காக உச்சிப்புளி காவல்துறையினர் ராமமூர்த்தி, தாமோதரன் ஆகியோர் அறைக்கு வெளியே இருந்தனர்.

கைதியுடன் தப்பிச் சென்றனர்
அப்போது அங்கு மாரிஸ்வரனின் உறவினர்கள் வந்தனர். மாரிஸ்வரனிடம் உடல்நலம் கேட்டறிந்த உறவினர்கள் திடீரென பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அறையில் வைத்து பூட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மாரீஸ்வரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாரிஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். மாரிஸ்வரன் மீது ஏற்கனவே திருட்டு, அடிதடி வழக்குகள் உள்ளன.












Click it and Unblock the Notifications