கோவில் வழிபாடுகளில் சாதி, நிற பாகுபாடு கூடாது.. மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து
மதுரை: ‛‛கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிறம் அடிப்படையில் பாகுபாடு கூடாது. கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வழிபட உரிமைகள் உண்டு. அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம் கோவில்'' என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியில் அய்யனார், கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதுதொடர்பாக ஒரு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. அப்போது பட்டியலினத்தவர்கள் பழங்குடியினரை இணைத்து விழா நடத்த தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதிமுருகன் என்பவர் மேல்முறையீடு செய்தார். அதில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வந்தது.
இந்த வழக்குமதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்தது. அப்போது, ‛‛ கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம். கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிறம் அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது. கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு'' என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும், ‛‛இதனை பின்பற்றாதது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதனால் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் என அனைவரையும் இணைத்து விழா கொண்டாட வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என நீதிமன்றம் கூறிய நிலையில் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications